Pages

Tuesday, May 25, 2010

நான்

எறும்புடன் கரப்பானும் ஈயொடு கொசு யாவும்
இருந்தாலே தொல்லையென எய்திடுவோம் நாசினியை
ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலும் அதுவென்று

பயிரழிக்கும் ஆடுகளைப் பசுக்களுடன் மான்களையும்
உயிரழித்து உண்கின்றோம் ஒரு சிறிதும் தயங்காமல்
பாரோர் பசி தீர்க்கப் பாங்கான வழி என்று.

நாட்டுக்குள் வந்திருந்து நாசம் விளைக்காமல்
காட்டு விலங்குகளைக் கண்டவுடன் சுட்டிடுவோம்
அச்சமின்றி வாழ்வதற்கு அது ஒன்றே வழி என்று.

நம் நாட்டுக் கொடி உயர நமதன்னை புகழ் பெறவே
பன்னாட்டுப் பகைவரையும் படையெடுத்து மாய்க்கின்றோம்
நாட்டுப் பற்றில்லையெனில் நாயினும் கீழன்றோ
தன்மொழியார் தன்னினத்தார் தன் சாதி உயிர் வாழ
தருகின்றோம் உடல் பொருளும் ஆவியுடன் துணிவுடனே
இன உணர்வு இல்லை எனில் இழிவு நமக்கென்று

அண்டையில் இருப்பவர் அழிந்திட்டால் பட்டினியால்
மண்டையில் எழுதியதால் மாய்கின்றார் அவர் என்போம்
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்

அன்பு வட்டம் வரவரவே சிறிதாய் ஆகி
நானென்னும் புள்ளியாகச் சுருங்கல் நன்றோ
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொலும்
நிச்சயமாம் ஞானத்தை நெஞ்சில் ஏற்போம்
முல்லைக்குத் தேரீந்த முன்னோன் கொடையும்
பறவைக்குத் தனை ஈந்த சிபியின் மனமும்
வாடுகின்ற பயிர் கொண்டு வாட்டம் கொண்ட
வள்ளல் பிரான் வாழ்வும் நாம் தினமும் ஓர்வோம்.

No comments:

Post a Comment