Pages

Wednesday, October 17, 2012

கொள்ளி எறும்பு





காலையில் காப்பி குடித்து விட்டு செய்தித் தாள் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமின் முகம் சட்டென்று இறுகியது. கமலா .... . அவரது குரலில் இருந்த வழக்கத்துக்கு மாறான கடுமையால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஓடி வந்தாள்.
சோதனைச் சாலையின் சாவி உன்னிடம் தானே இருக்கிறது, வேறு யாரிடமும் கொடுக்கவில்லையே? ” கோபத்துடன் அவர் கேட்டார்.
இல்லையே. என்னைத் தவிர வேறு யாரும் அதில் நுழையவில்லையே. என்ன ஆயிற்று? ” பதற்றத்துடன் கேட்டாள் கமலா.
சரி, சோதனைச் சாலையைத் திற, பார்ப்போம் என்று எழுந்த அவர், மனைவியைத் தொடர்ந்து அதில் நுழைந்தார். பூட்டப்பட்டிருந்த கம்பி வலைப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த இன்னொரு கம்பி வலைப் பெட்டி, அதனுள் இன்னொன்று என்று மூன்று பூட்டுகளைத் திறந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதை அப்படியே வாளித் தண்ணீரில் முக்கி எடுத்து விட்டுத் திறந்தார்.
உள்ளே பெரிய எறும்புகள் நிறைய இருந்தன. அவை தூங்கிக் கொண்டிருந்தன. ராஜாராம் அவற்றைத் தட்டில் கொட்டி எண்ணினார். மொத்தம் 30 எறும்புகள் இருந்தன.
சரியாகத் தான் இருக்கிறது. பின் அது எப்படி நடந்தது? ” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
தந்தையின் கோபக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்ட சுரேஷ் அப்படிக் கோபமூட்டிய விஷயம் என்னவாக இருக்கும் என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த செய்தித் தாளை நோட்டம் விட்டான். மூன்றாவது பக்கத்தின் அடி மூலையில் இருந்த ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.
பர்னிச்சர் கடையில் திருடர்கள் கைவரிசை. நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நாற்காலி மேஜைகள் அபேஸ். பூட்டை உடைக்காமல் கொள்ளை அடித்த மர்மம் என்று தலைப்பிட்ட திருநெல்வேலிச் செய்தி ஒன்று இருந்தது.
ரொக்கம், மரச் சாமான்கள் இரும்புச் சாமான்கள் அப்படியே இருக்க பிளாஸ்டிக் சாமான்களை மட்டும் திருடர்கள் சூறையாடிச் சென்றிருந்தனர். இந்தத் திருட்டு தினம் தோறும் நடைபெறுகிறது. போலீசார் இது பற்றிப் புலன் விசாரித்து வருகின்றனர்.
அப்பாவின் பதற்றத்துக்கு இந்தச் செய்தி தான் காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.
யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜாராம் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவர் போல் எழுந்தார். உள்ளூர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளரின் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருடன் பேசத் தொடங்கினார்.
ஹலோ, நான் கோயம்புத்தூரிலிருந்து விஞ்ஞானி டாக்டர் ராஜாராம் பேசுகிறேன். உங்கள் ஊரில் பிளாஸ்டிக் சாமான் திருட்டு என்று ஒரு செய்தி பார்த்தேன். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி வேறு ஏதேனும் நடந்ததா ? ”
      வேறு எங்கும் நடக்கவில்லை. ஒரு கடையில் மட்டும் தினம் தோறும் 10, 15 பிளாஸ்டிக் சாமான்கள் காணாமல் போகின்றன.
என்னால் உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாளை பகல் 12 மணிக்குள் 10 கிலோ உடைந்த பிளாஸ்டிக் வேண்டும். பாலிதீன் பைகளாகவும் இருக்கலாம். பழைய சாமான் கடைகளில் சொல்லி இதற்கு ஏற்பாடு செய்து விட்டு எனக்கு போன் செய்யவும். விபரம் நேரில் சொல்கிறேன். நான் உடனே புறப்பட்டு வருகிறேன்.
மறு நாள் காலை 9 மணிக்கு ராஜாராம் திருநெல்வேலி காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன் இருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், பிளாஸ்டிக் சாமான்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் அது திருட்டு அல்ல. அது ஒரு வகை எறும்புகளின் வேலை. நான் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து ஒரு வகை எறும்பு – அதற்கு கொள்ளி எறும்பு என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் – உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ஆகாரமே பிளாஸ்டிக் தான். ஒரு எறும்பு ஒரு நாளைக்கு அரை கிலோ பிளாஸ்டிக் வரை சாப்பிடும். இதோ பாருங்கள். இந்தப் பெட்டியில் 30 எறும்புகள் உள்ளன. இதற்குத் தான் நான் பிளாஸ்டிக் குப்பை கேட்டேன். இது போன்ற எறும்புகள் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்.
அவர் கூறியதை நம்ப முடியாமல் கண்காணிப்பாளர் அவரை உற்றுப் பார்த்தார். ராஜாராம், குப்பை இருக்கும் இடத்துக்கு நாம் போவோம். அவை சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள்.
அவரது திட்டப்படி பத்தடிக்குப் பத்தடி ஒரு திட்டு அமைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு தண்ணீரால் நனைக்கப்பட்டது.
ராஜாராம் தன் சூட்கேசில் இருந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதைத் தண்ணீரில் முக்கி விட்டுத் திறந்தார். மிகக் கவனமாகச் சிந்தாமல் சிதறாமல் எறும்புகளைத் திட்டில் கொட்டினார். சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த எறும்புகள் பின்னர் அசைய ஆரம்பித்தன. திட்டில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களைத் தின்னத் தொடங்கின. என்ன வேகம்! ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை குப்பையும் காலி. எல்லோரும் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராஜாராம் ஒரு வாளித் தண்ணீரைத் திட்டில் தெளித்தார். உடனே எறும்புகள் மயக்க நிலையை அடைந்தன. அவர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பெட்டியில் போட்டார். எண்ணிக்கையை உறுதி செய்துகொண்டபின் பெட்டியைச் சூட்கேசில் பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்தார்.
கண்காணிப்பாளர் ஆச்சரியம் தாங்காமல், இது என்ன வகை எறும்பு ? எங்கிருந்து வந்தது ? உங்களிடம் மட்டும் தான் இருக்கிறதா ? ” என்று கேட்டார்.
ராஜாராம் பேசத் தொடங்கினார். நான் பூச்சி இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். காங்கோ காட்டில் ஒரு இடத்தில் மரங்கள் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே ஒரு எறும்புக் கூட்டம் இருநதது. அவை ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கரையான். பல நாள் தொடர்ந்து கவனித்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த எறும்புகள் பயங்கரப் பசி கொண்டவை. ஒரு கூட்டம் ஒரு நாளில் ஒரு மரத்தைத் தின்று விடும். ஆனால் அவற்றுக்கு ஒரு விசித்திரமான குறைபாடு. ஈரம் அவற்றுக்குப் பகை. ஈர மரத்தை அவை நெருங்க முடியாது. அதற்காக அவை ஒரு தந்திரம் செய்கின்றன. ஒவ்வொரு எறும்பும் ஒரு கரையான் பூச்சியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தின் அடி வரை செல்கின்றன. கரையான்கள் எறும்புகளின் கட்டளைக்கு இணங்க மரத்தின் அடிப்பகுதியில் குடைந்து மரம் பட்டுப் போகச் செய்கின்றன. மரம் காய்ந்தபின் எறும்புகள் அதை உண்கின்றன.
நான் அந்த எறும்புகள் சிலவற்றைப் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆராய்ச்சிச் சாலையில் வைத்து மரபணு மாற்றம் மூலம் ஒரு புதிய வகை எறும்பை உருவாக்கினேன். நீங்கள் பார்த்த இது தான் அது. பிளாஸ்டிக் மட்டும் தான் சாப்பிடும். தண்ணீர் பட்டால் மயங்கிவிடும். என்னிடம் உள்ள எறும்புகளை எப்போதும் ஈரத்திலேயே வைத்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு எழுப்பி பிளாஸ்டிக் குப்பைகளை உணவாகக் கொடுத்துவிட்டு மறுபடியும் மயங்க வைத்து விடுவேன். அவை விழித்திருந்தால் நாள் பூராவும் உணவு உண்டு கொண்டே இருக்கும். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. என்னுடைய கவலை என்னவென்றால் என் கட்டுப் பாட்டை மீறி திருநெல்வேலியில் ஒரு எறும்புக் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை இப்படியே விட்டால் ஒரு வருடத்திற்குள் உலகம் முழுவதும் பரவி பிளாஸ்டிக் பொருட்களே இல்லாமல் செய்து விடும்.
ஆம். இனிமேலும் இது பரவாமல் தடுக்க நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்.
உடனடியாக இந்தச் சம்பவம் நடந்த தெருவைச் சுற்றி அகழி போல்  தண்ணீரால் இடைவிடாது நனைத்துக் கொண்டிருக்க வேண்டும். அங்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் அகற்ற வேண்டும். இப்படி மூன்று நாள் அவைகளுக்கு ஆகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொன்றுவிடும். அப்பொழுது தான் நாம் பிழைக்கலாம்.
அரசாங்கத்திற்குச் செய்தி பறந்தது. அனுமதி பெறப்பட்டது. பத்திரிகை, தொக்கா நிருபர்கள் அழைக்கப்பட்டனர். ராஜாராம் சொன்னபடி போர்க்கால முனைப்புடன் வேலைகள் நடந்தன. நகரம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. 
மறுநாள் வேறு எங்கும் இந்த மர்மத் திருட்டு நடக்கவில்லை. இப்படி 5 நாள் கழிந்தபின் தெரு மக்கள் தத்தம் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்தனர்.
 திருநெல்வேலி நகரம் மட்டுமல்ல. உலகமே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் டாக்டர் ராஜாராம் மட்டும் கவலையுடனேயே இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி ரகசியம் யாராலோ திருடப் பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகித்தார். குற்றவாளி சிக்காத வரை ஆபத்து நீங்கவில்லை என்பதைக் காவல் துறைக்குத் தெரிவித்தார்.
காவல் துறையினர் டாக்டர் ராஜாராம் வீட்டுக்கு வந்து உள்ளும் புறமும் சுற்றிப் பார்த்தனர். அவரது உறவினர்களையும் அயலார்களையும் அவரது வீட்டுக்கு வரும் பால்காரர் முதலானவர்களையும் துருவித் துருவி விசாரித்தனர். சாவி ராஜாராமின் மனைவியிடம் இருந்ததால் அவளைத் திரும்பத் திரும்பக் கேள்விகளால் துளைத்தனர்.
நன்றாக யோசனை செய்து பாருங்கள். கடந்த 15 வருடத்தில் ஒரு நாள் கூட சாவியை நீங்கள் வேறு யாரிடமும் கொடுத்தது கிடையாதா ? ”
கமலா ஆழ்ந்து யோசனை செய்தாள். ஆம். ஒரே ஒரு நாள், சென்ற வருடம், உடல் நலமில்லாமல் படுத்திருந்த போது வேலைக்காரியை விட்டு அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அவள் என் கண் எதிரிலேயே கூட்டிக் குப்பையை வாசலில் கொட்டி விட்டு வந்து பூட்டி என்னிடம் சாவியைக் கொடுத்து விட்டாள்.
காவலர்கள் வேலைக்காரியை விசாரித்ததில் விஷயம் வெளிவந்தது. ஒரு தாடிக்காரர் அடிக்கடி அவளிடம் வந்து ராஜாராமின் சோதனைச் சாலையில் எழுதப்பட்ட நோட்டுகள் ஏதேனும் இருந்தால் எடுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 5000 ரூபாய் தருவதாக ஆசை காட்டினார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த அவளுக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. குப்பையை வாசலில் கொட்டப் போகும்போது அறையிலிருந்த டயரியையும் எடுத்துச் சென்றாள். அதன் பக்கங்களை பிரதி எடுத்துக் கொண்டு எடுத்தது தெரியாமல் வைத்து விட்டுப் பூட்டிச் சாவியைக் கொடுத்து விட்டாள்.
அவள் கொடுத்த தகவலின் பேரில் காவலர்கள் அந்தத் தாடிக்காரரை வலை வீசிப் பிடித்து விட்டனர். திருநெல்வேலி வாசியான அவர் ராஜாராமுடன் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தவர் என்றும் தேர்வில் காப்பி அடித்ததற்காக தடை செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. எப்படியாவது வி்ஞ்ஞானி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராஜாராமின் சோதனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளப் பாடு பட்டதாகச் சொன்னார்.
டயரியில் இருந்தபடி பிளாஸ்டிக் தின்னும் எறும்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் முறை அந்த டயரியில் இல்லை. எனவே அவை என் கையை மீறிச் சென்றுவிட்டன.
டாக்டர் ராஜாராம் மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். அவரது முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம்.






அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள்


சில ஆண்டுகளுக்கு முன்பு, அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள் என்ற தலைப்பில் தாவர இயல் பேராசிரியர் திரு பாலு என்பவர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள். கீழ்க் கண்டவற்றில் *குறியிட்டவை அவர் செயல் முறை விளக்கத்துடன் காட்டியவை.
*நார்த்தாமலையில் கிடைக்கும் ஒரு அரிய மரத்தின் இலை புறாத் தழை. இதில் ஒன்றை எடுத்துக் கசக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை பாலில் விட்டால் அது உடனே  தயிர் ஆகிவிடும்.
*கட்டுக் கொடி என்று ஒரு மூலிகை. இதில் 3 வகை உண்டு. ஒன்று விஷமுடையது. மற்ற இரண்டுக்கும் ஒரு குணம் உண்டு. இதைப் பிழிந்து வரும் சாற்றைத் தண்ணீரில் கலந்தால் தண்ணீர் அல்வா போல, கெட்டியாகவும் இனிப்புச் சுவையுள்ளதாகவும் மாறும்.
சதுரக் கள்ளி என்றொரு செடி. இதன் பாலை ஈர அரிசியுடன் கலந்து வைத்தால் அரிசி வெந்து சாதமாகிவிடும். ஆனால் இது உண்பதற்கு உரியது அல்ல.
நீரைக் கொண்டு விளக்கு எரிக்க முடியுமா? சித்தர்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நாமும் சித்தராகலாம். சதுரக் கள்ளிப் பால், அத்திப் பால், ஆலம்பால் இவற்றில் ஒன்றை நீருடன் கலந்து திரியிட்டுக் கொளுத்தினால் விளக்கு எரியும்.
*தேத்தாங்கொட்டையை அறைத்துத் தண்ணீரில் கலக்கினால் தண்ணீரில் உள்ள அசுத்தங்கள் அடியில் தங்கி விடும். அதிகமாகச் சேர்த்தால் தண்ணீரின் நிறம் பால் போல மாறிவிடும். வெய்யிலில் வைத்தால் மீண்டும் இயற்கை நிறம் வரும்.
*தாமரை விதையைப் பொடி செய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும். வெய்யிலில் வைத்தால் இயற்கை நிறம் வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பதாகச் சொல்லப்படுவதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?
*அவல் வாயில் போட்டவுடன் ஊறிக் கரைந்து விடுகிறது அல்லவா? நெய்யுடன் கலந்து உண்டு பாருங்கள். லேசில் கரையாது.
*மணலைக் கயிறாகத் திரிக்க முடியுமா? முடியும் என்கிறார் திரு பாலு. நீர்முள்ளி விதைப் பொடியைத் திருநீற்றுடன் கலந்து அதைக் கொண்டு ஈர மணலைக் கயிறாகத் திரிக்கலாம்.
*இதே பொடியைக் கொண்டு நீரில் கரைந்த மஞ்சள் பொடியை மீண்டும் திரட்டி உருட்ட முடியும்.
இந்தப் பொடியை ஒரு முறை உண்டால் ஒரு மாதத்திற்கு பசிப்பிணி இல்லாமல் வாழமுடியும்.
*சிறுகண்பூளை, நத்தைசூரி, நாயுருவி இவற்றில் ஒன்றை வாயிலிட்டு நன்றாக மென்றபின் பானை ஓடு, கண்ணாடி போன்றவற்றைப் பல்லால் கடித்து அரைக்கலாம். வாயில் ரத்தம் வராது.
*நத்தைசூரியை மென்றுகொண்டே கண்ணில் மணலைக் கொட்டிக் கொண்டால் கண்ணில் எந்தவித உறுத்தலும் இராது.
கோபுரம் தாங்கி, விழுதி இலை, திருநீற்றுப் பச்சிலை இவை மூன்றையும் அல்லது இவற்றில் ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டால் அதிக சுமை தூக்க முடியும். அதி வேகமாக ஓடவும் வலிமை கிடைக்கும்.
சோற்றுக் கற்றாழையின் சோறு, வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய் இவற்றைச் சம அளவு கலந்து கையில் தடவிக் கொண்டு பழுக்கக் காய்ந்த இரும்பைத் தொடலாம்.


தியானப் பயிற்சி



சுகமான கனவு. சட்டென்று கலைந்தது. ஊதுபத்தி அணைந்த பின்னும் அதன் மணம் அறையில் சூழ்ந்திருப்பதைப் போலக் கனவு கலைந்த பின்னும் அதன் ஆனந்தம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. கண்களைத் திறக்காமலேயே சில நொடிகள் அதை அனுபவித்தேன். பகல் கனவின் சுவையே தனி தான்.
பிரக்ஞை வந்தது. நான் எங்கிருக்கிறேன்? உட்கார்ந்திருக்கிறேனே? அடேடே, தியான வகுப்பில் அல்லவா உட்கார்ந்திருக்கிறேன்? ஆண்களும் பெண்களுமாக 70 பேர் கொண்ட வகுப்பு. சே, என்ன அவமானம்! சுற்றிலும் 69 ஜோடிக் கண்கள் நான் கண் திறந்தவுடன் கொல்லென்று சிரிக்கத் தயாராகி என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ளுணர்வு. எல்லோரும் கட்டாயமாக மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் சத்தம் வரும்படியாகச் சிரிக்க மாட்டார்கள். என்றாலும் அத்தனை பேருடைய இதழ் ஓரங்களில் ஒரு பரிகாசப் புன்னகை தோன்றி மறைவதை என்னால் தாங்க முடியுமா?
என்ன செய்வது? வருவதை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கண்ணைத் திறக்கிறேன். அப்பாடா, யாரும் என்னைப் பார்க்கவில்லை. அனைவரும் கண்களை மூடியிருந்தனர். உற்றுப் பார்த்ததில் அவர்களும் உறங்குவதாகத் தெரிந்தது. சிலர் குறட்டை கூட விட்டுக் கொண்டிருந்தனர். மேடை மேல் அமர்ந்திருந்த தியான ஆசிரியரின் தலையும் தொங்கலிட்டிருந்தது. நான் தான் முதலில் விழித்திருக்கிறேன்.
பத்து நாள் முகாம். அங்கேயே தங்கி உணவு உண்டு நாள் பூராவும் யாருடனும் பேசாமல் தியானம் ஒன்றே வேலையும் பொழுதுபோக்குமாக இருக்க வேண்டும்.  அமைப்பாளர்களைப் பாராட்டவேண்டும். இலவசம் என்பதற்காக ஏனோ தானோ என்று உணவளிக்கவில்லை. பத்து நாளும் மூன்று வேளையும் வித விதமான வட இந்திய தென் இந்திய உணவு வகைகளைச் செய்து போட்டு அசத்தினர்.
வாய்க்கு ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வேறு வேலை இல்லாமல் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் தூக்கம் வராமல் என்ன செய்யும்?
முகாம் பயனற்றது என்று சொல்லலாமா? கூடாது. 12 மணி நேரத்தில் அவ்வப்போது சில வினாடிகள் உறக்கமும் விழிப்பும் கனவும் அல்லாத ஒரு நிலை ஏற்பட்டது உண்மை. இதைத்தான் துரிய நிலை என்கிறார்களோ?
என்ன செய்வது? ஒரு வைரக் கல்லைக் கண்டுபிடிக்க டன் கணக்கில் தானே மண்ணைப் புரட்ட வேண்டியிருக்கிறது?  

பாதாள சாக்கடை




தினந்தோறும் மாலை 5, 5 1/2 மணிக்கு மேல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு சுற்றிலும் நாற்றம். இது 10 நிமிடத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கிறது. எங்கிருந்து தோன்றுகிறது என்பது தெரிந்தால் தானே அதை நிவர்த்திக்க வழி தேட முடியும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. இதைப் போல நூற்றுக் கணக்கான புகார்கள் தினமும் வருகின்றன. அவர்கள் எதை என்று கவனிப்பார்கள் ?      
அந்தி நேரத்தில் வீட்டில் அடைந்து கிடக்காதே. கோவிலுக்குப் போ என்று இறைவன் தடுத்தாட் கொள்வதாக எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன். கோவில் வாசலில் ஒரு திறப்பிலிருந்து நாற்றம் பெருமளவில் வந்து கொண்டிருந்தது. ஜகன்மாதாவின் இருப்பிடம் தான் நாற்றத்திற்கும்  பிறப்பிடமா? உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவள் அன்னை காமாட்சி என்பதற்குப் புதிய விளக்கம் கிடைத்தது.
மறுநாள், சற்றுத் தொலைவிலுள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் பாதாள சாக்கடையின் இரும்பு மூடியைத் தூக்கிக் கொண்டு துர்நாற்ற வாயு வெளியேறிக் கொண்டிருந்தது. அடுப்பின் மேல் வைக்கப்பட்ட வெந்நீர்ப் பாத்திரத்தின் மூடி படபடவென்று அடித்துக் கொள்வது போல அந்தக் கனமான மூடி மூடுவதும் திறப்பதுமாக இருந்ததை ஜேம்ஸ் வாட்டோ, ஜார்ஜ் ஸ்டீவன்ஸனோ பார்த்திருந்தால் அந்த வாயுவைக் கொண்டே மெட்ரோ ரயிலை ஒட்டுவதற்கான திட்டம் தீட்டியிருப்பார்கள்.
அம்மையும் அப்பனுமே நாற்றத்தின் பிறப்பிடமாகவும் நாற்றத்தைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருக்கும் போது நாமும் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் ஸ்திதப் ப்ரக்ஞனாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.       
என் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி தான் நாறுகிறது என்று முதலில் நினைத்தேன். ஒரு முறை நகர் வலம் வந்த பிறகு தெரிந்தது, சிங்காரச் சென்னை நகரின் எல்லாப் பகுதிகளும் அப்படித்தான். சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா நகரங்களின் நிலையும் அது தான் என்பதும் அந்தந்த ஊர்ப் பேருந்து நிலையங்களில் நிற்கும்போது தெரிய வந்தது.
என்ன காரணம்? மக்களின் தூய்மை உணர்வுக் குறைவும், கழிவுகளை அகற்றுவதில்  நகர நிர்வாகங்கள் போதிய முனைப்புக் காட்டாமையும் தான். நிர்வாகத்தையும், மற்ற மக்களையும் குறை கூறுவதைத் தவிர இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேறு என்ன செய்யலாம்?
குப்பைகளும் நாற்றத்துக்குக் காரணம் என்றாலும் நாற்றத்தின் பெரும் பகுதி பாதாள சாக்கடைகளிலிருந்து தான் என்பதை அறியலாம். ஆரோக்கிய வழியாகப் பேசப்பட்ட இது நோய்க்குக் காரணமாக அமைந்து விட்டது. கொசுக்களின் பிறப்பிடமே இந்தப் பாதாள சாக்கடைகள் தாம். குடிநீர்க் குழாய்களும் கழிவுநீர்ப் பாதைகளும் நிலத்தடியில் ஒன்றை ஒன்று ஊடுருவிச் செல்வதால் குடிநீரும் அடிக்கடி கெட்டுவிடுகிறது. இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அதில் முழுமையாகத் தோற்றுவிட்டது.
கழிவுப் பிரச்சினை உள்பட எல்லாப் பிரச்சினைகளையும்   ஆங்காங்கு சிறுவட்டங்களில் தீர்ப்பதற்குப் பதிலாக பெரிய வட்டத்தில் மையப்படுத்துகிறோம். நகரங்கள் பெரிதாகப் பெரிதாகப் பிரச்சினைகளின் அளவும் சிக்கலும் பெரிதாக வளர்ந்து கொண்டு வருகின்றன.
நகரங்கள் பரப்பளவில் மட்டுமன்றி உயரத்திலும் வளர்ந்துகொண்டு வருகின்றன. ஒரு குடும்பம் இருந்த இடத்தில் ஒருவர் தலை மேலே ஒருவராக நான்கு குடும்பங்கள் வாழ்கின்றன. நாற்றமும் நெரிசலும் வாகனப் புகைகளும் இரைச்சலும் பழைய அமைதியான கிராம வாழ்க்கையை எண்ணி ஏங்க வைக்கின்றன. காந்தி சொன்னபடி இனியாவது கிராமங்களை உயர்த்தலாம், மேலும் நகரங்கள் பூதாகாரமாக வளர்வதைத் தடுக்கலாம். உருவாகிவிட்ட நகரங்களைச் சிறியதாக ஆக்க முடியாது. இந்தச் சாக்கடைப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? காந்திய வழி இதற்குப் பயன்படுமா?
விடை தேடுமுன் என்னுடைய பழைய அனுபவம் ஒன்றைச் சொல்வதற்காக ஒரு சிறிய இடைவேளை.
1970 இல் வேலை நிமித்தம் ஒரு கிராமத்தில் குடியேற நேர்ந்தது. 25 ரூபாய் வாடகையில் ஒரு புது பங்களா வாடகைக்குக் கிடைத்தது. வீட்டைத் திறந்து காட்டிய உரிமையாளரிடம் கேட்டேன், வீட்டை ஆடம்பரமாகக் கட்டி இருக்கிறீர்கள். கழிவறை எங்கிருக்கிறது? கண்ணில் படவில்லையே? ” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ஓ நீங்கள் நகர வாசியா? அது தான் உங்களுக்குத் தெரியவில்லை. நாற்றத்தை வீட்டுக்குள் பாதுகாக்கும் அநாகரிகம் கிராமங்களில் கிடையாது என்றார்.
பின் என்ன வழி? ”
தெருக் கோடியில் உள்ள சவுக்கைத் தோப்பு ஆண்களுக்கானது. எதிர்த் தரப்பில் உள்ளது பெண்களுக்கானது. தெரு மக்கள் எல்லோரும் அங்கு தான் செல்வார்கள்.
எங்கள் வீட்டுப் பெண்களுக்கு இது சரிப்பட்டு வராது. எனவே காந்திய முறைக் கழிவறை ஒன்று கட்டத் தீர்மானித்தேன். அருகில் நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் உதவ முன் வந்தான். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போய் எங்கிருந்தோ 100 பனை மட்டைகளை வாங்கிக் கொண்டு போட்டான். வேலிக்காலில் இருந்த ஒதிய மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி நட்டான். மட்டைகளை வரிசையாக அமைத்துக் கட்டினான். உள்ளே ஒரு அடி ஆழம் முக்கால் அடி அகலத்தில் நீளமாக ஒரு பள்ளம் வெட்டச் செய்தேன். அவனுக்குக் கொடுத்த அன்பளிப்பு உள்பட 15 ரூபாயில் ஒரு மணி நேரத்தில் பத்துக்கு எட்டடி  அளவில் கழிப்பறை தயார். இதை நாங்கள் அங்கிருந்த ஆறு ஆண்டுக் காலம் பயன்படுத்தினோம். கழிவுகளை உண்டு வாழும் ஒரு வகை வண்டுகள் மறு நாளுக்குள் அதை மண்ணாக்கிவிடும். இம்முறை நிலத்தை வளப்படுத்தக் கூடியது. நிலத்தடி நீரைக் கெடுக்காதது.   
ஒரு துளசிச் செடி வைக்கக் கையளவு மண் கூட இல்லாத நகரக் கட்டிடங்களில் இந்தக் காந்திய வழி சரிப்படுமா? கூகுளாண்டவரைக் கேட்டதற்கு மாற்று வழி உண்டு என்று சொன்னார்.
எகோசான் என்பது காந்தியத்தின் 21 ஆம் நூற்றாண்டு அவதாரம். இதில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மலம் சேகரிக்கப்படுகிறது. சிறு நீரும் கழுவும் நீரும் வேறு வேறு பாதைகளில் செல்கின்றன. வாளியின் மேல் ஒரு ஓட்டையுள்ள ஸ்டூல் நாம் அமர்வதற்காக வைக்கப்படுகிறது. வாளியில் சேரும் மலத்தின் மீது உடனே சாம்பல் தூவ வேண்டும். இதனால் நாற்றம்  வெளிவராமல் தடுக்கப்படுவதோடு அது உடனே மக்கவும் தொடங்குகிறது. இப்படி வாளி நிரம்பும் வரை, எத்தனை நாள் வேண்டுமானாலும், வைத்திருக்கலாம். அதன்பின் அடுத்த வாளியை வைக்க வேண்டும். இரண்டாவது வாளி நிரம்புவதற்குள் முதல் வாளியில் உள்ளது மடித்து மண்ணாகி விடும். அப்போது (சுகாதாரத் துறையிலோ கிராம முன்னேற்றத் துறையிலோ) செயலராக இருந்த சாந்தா ஷீலா நாயர் அந்த மண்ணைக் கையால் எடுத்து முகர்ந்து பார்ப்பதை பத்திரிகைகளில் படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். நாற்றம் இருக்காது. தொற்று நோய்க் கிருமிகள் இரா. மண்ணைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். நம் வீட்டில் பயன்படுத்த முடியவில்லை எனில் தேவைப்படுவோருக்கு விற்கலாம். வாளியை மீண்டும் கழிவறையில் பயன்படுத்தலாம்.
எல்லா வீடுகளிலும் காஸ் அடுப்பு வந்து விட்ட நிலையில் சாம்பலுக்கு எங்கே போவது? கவலை வேண்டாம். அரிசி அறவை ஆலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்திய உமியின் சாம்பல் மலையாகக் குவிந்து கிடக்கும். அதை இலவசமாகவே கொடுப்பார்கள் அல்லது குறைந்த விலைக்கு வாங்கலாம். சுமை கூலி தான் செலவு. பத்துப் பேர் சாம்பல் தேவை என்று கேட்க ஆரம்பித்து விட்டால் தெரு முனைக் கடைகளில் தற்போது தண்ணீர்க் குடுவைகள் விற்பது போல சாம்பல் மூட்டைகளும் விற்கத் தொடங்கி விடுவார்கள். சாம்பலுக்குச் செய்யும் செலவை உர விற்பனை மூலம் சரிக்கட்டி விடலாம்.  
இம்முறை அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கும் ஏற்றது. இதனால் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் சுமை குறையும், நாற்றம் நீங்கும். கொசுத் தொல்லை குறையும். ஒரு குடும்பம் ஆண்டு ஒன்றுக்கு 50 லிட்டர் கழிவை ஏற்படுத்துவதாகவும் இதை பாதாள சாக்கடையில் கொண்டு சேர்க்க 15000 லிட்டர் நீர் செலவாகிறது என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தண்ணீர்ச் செலவு கணிசமாகக் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, நிலத்தடி வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக அந்த அசுத்த நீரில் ஒரு மனிதனை முழுக வைக்கிறோமே அந்தக் கொடுமை நீங்கும்.
பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் நிலத்தடி அறைகளில் சென்றடையும் கழிவு நீர் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீரைக் கெடுத்து விடுகிறது. எகோசான் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தொல்லை நீங்கும்.
இதே போல, சிறுநீரைப் பத்துப் பங்கு நீருடன் கலந்து சிறந்த உரமாக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை வீட்டளவில் எப்படிச் செய்வது என்பதைப் பின்னர் திட்டமிடலாம்.